இந்திய ஆசியர்களையும் அங்கீகரியுங்கள் – சார்ல்ஸ் கோரிக்கை
திறன் வாய்ந்த இந்திய ஆசிரியர்கள் இருந்தும் அவர்களுக்கு தகுந்த வாய்ப்புகள் வழங்க பாடாமல் இருப்பது மனதுக்கு வேதனைக்குரிய விஷயம். “ஒரே மலேசியா” கொள்கையை முழக்கம் போடும் அரசாங்கம், அதனை எந்த அளவிற்கு நடைமுறையில் செயல் படுத்துகின்றது என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
அண்மையில், பள்ளி தலைமைத்துவ பொறுப்பிலும், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் சிலாங்கூர் மாநில கல்வி துறைகளிலும் மலாய்க்காரர் அல்லாதவர் குறிப்பாக இந்திய ஆசிரியர்களுக்கு வழங்கப் படாத வாய்ப்புகளை மேற்கோள் காட்டி தனது ஆதங்கத்தை ஆசிரியர் ஒருவர் பிரதமர் நாஜிப் துன் ராசகிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
அது குறித்து தமது கருத்து தெரிவிக்கையில், மலாய் ஆதிக்கத்தை வலுப்படுத்த திறமையுள்ள மற்றும் தகுதி வாய்ந்த மலாய்காரர் அல்லா ஆசிரியர்களை புறக்கணிப்பது நியாயமற்ற செயலே என கூறினார் சார்ல்ஸ்.
மேலும், மலாய்க்காரர் மற்றும் மலாய்க்காரர் அல்லாதவரின் பதவி நியமனங்கள் பற்றிய புள்ளி விவரம் அவர்களுக்கு இழைக்கப் பட்ட ஏமாற்றங்களையும் வேதனைகளையும் தெளிவாகச் சித்தரிக்கின்றன என கூறுகையில், தகுதி பெற்ற மலாய்க்காரர் அல்லா ஆசிரியர்கள், மலாயக்காரர் அல்லாதவர் எனும் காரணத்திற்காக பதவி ஏற்றப் படாமல் இருப்பதும் அதற்கு பதிலாக குறைந்த அனுபவம் பெற்ற மலாய்கார ஆசிரியைகளை அப்பதவிக்கு நியமிப்பதும் “ஒரே மலேசியா” கொள்கையில் அடிப்படையிலான செயலாக எப்படி இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார் அவர்.
திறனானவர்கள் எவராக இருப்பினும் இனம் ,மதம்,மொழி பாராது அவர்களை அங்கீகரிக்க வேண்டும், வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதுவே எங்களின் கோரிக்கை. அரசாங்க துறைகளில் அதிக இந்தியர்களின் விண்ணப்பம் தேவை என மலேசிய பொதுச் சேவைத் துறை ஆணையத்தின் ( எஸ்.பி.ஏ) தலைவர் டான்ஸ்ரீ மஹ்மூட் அடாம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசிரியர் துறைகளில் மட்டுமில்லாது அரசாங்கத் துறைகளிலும் தகுதியான திறமையான இந்தியர்களை அங்கீகரித்து வாய்ப்பு வழங்க அரசு தயாரானால், அரசாங்க துறைகளில் வேலை செய்ய இந்தியர்களின் ஆர்வமும் அதிகமாகும் என நம்பிக்கை பூண்டார் சார்ல்ஸ்.