IMMEDIATE PRESS RELEASE
17 / 7 / 2012
மக்கள் அச்சத்தில் நடமாடுகின்றனர் – மலேசிய பாதுகாப்பான நாடா?? – சார்ல்ஸ் கேள்வி
நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளன. பொது மக்கள் பாதுகாப்பான நிலையில் உள்ளனர் எனும் உள்துறை அமைச்சின் கூற்றும் மறுபக்கம் என்.கே.ஆர்.ஏ குற்றவியல் புள்ளிவிவரங்களும் உண்மைக்கு புறம்பாக உள்ளது என குற்றம் சாட்டினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
கடந்த ஆண்டு (2011) ஜனவரி முதல் மே வரையில் 70, 343 குற்றவியல் செயல்களும் இவ்வாண்டு (2012) ஜனவரி முதல் மே வரையில் 63,221 குற்றச்செயல்கள் நிகழ்ந்துள்ளதாக பெமாண்டு வெளியாக்கிய அறிக்கை ஒன்று கூறுகின்றது. அதாவது, கடந்த ஆண்டு (ஜனவரி – மே) காட்டிலும் இவ்வாண்டு மே வரையில் குற்றவியல் செயல்கள் 10.1% குறைந்துள்ளதாகக் கூறும் அதே வேளையில், தெரு குற்றங்கள் 43.0% குறைந்துள்ளதாக அக்குறியீடு கூறுகின்றது.
இது உண்மைக்கு புறம்பானது எனக் கூறிய சார்லஸ், நாட்டில் எத்திசை பார்த்தாலும் குற்றச்செயல் அதிகரித்துக் கொண்டு வருவதையும் பொது மக்கள் அச்சத்தில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் எனவும் கூறினார். என்.கே.ஆர்.ஏ -வின் குறியீடு நடைமுறையில் நிகழ்வதை பிரதி பலிக்க தவறி விட்ட வேளையில், ஏன் இந்த குழப்பத்தை மக்களிடையே உள்துறை அமைச்சு ஏற்படுத்துகின்றது என கேள்வி எழுப்பினார்.
நாட்டு மக்களை பாதுகாப்பது அரசாங்கம், காவல் துறை மற்றும் உள்துறை அமைச்சின் தலையாய கடமையாகும். ஆனால் தற்போதைய நிலைமை மிக வேதனைக்குரிய நிலையிலும் அச்சத்திற்குரிய நிலையிலும் உள்ளது. மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாட இயலவில்லை என கூறிய சார்ல்ஸ்,மக்களுக்கு அச்சமின்மையான அமைதியான மற்றும் நிம்மதியான சூழ்நிலையை உருவாக்க அரசாங்கம் காவல் துறை, அரசுசார்பற்ற இயக்கங்கள், இதர அரசியல் கட்சிகள்,குடியிருப்பாளர் சங்கம் ஆகியவைகளுடன் ஒன்றிணைந்து காலத்தை கடத்தாமல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.