மூலம்:- செம்பருத்தி April 23, 2011 3:24 am
கிள்ளானில் அணு உலை கட்டுமானத் திட்டத்தை எதிர்த்துக் கூட்டம் கூட்டியதற்காக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார்.
கிள்ளானில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி செக்ஷண் 52 சட்டத்தின் கீழ், காவல்துறை அனுமதியில்லாமல் சட்டத்திற்கு புறம்பான கூட்டமொன்றை ஏற்பாடுசெய்தார் என காவல்துறை அதிகாரி ஒருவரால் சார்ல்ஸ் சந்தியாகோ மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.
கடந்த புதன்கிழமை கிள்ளான் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர், சார்ல்ஸ் “இது ஜனநாயக நாடு, நமது எண்ணத்தை தெரிவிக்க கூட்டம் நடத்த நமக்கு உரிமை இல்லையா?”, என கேள்வி எழுப்பினார்.
“இது தனி மனிதனின் அடிப்படை உரிமையாகும். நமக்கு பேசும் சுதந்திரம் உள்ளது. நமது எண்ணத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. மேலும் சொல்லப் போனால் இவ்வாறான கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் என் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது எனது உரிமையையும் கிள்ளான் மக்களின் உரிமையையும் சேர்த்து பறிக்கும் முயற்சி என கூறிய சார்ல்ஸ் அதே நாளன்று கேப்ஸ் மற்றும் அம்னோ நடத்திய மறியலுக்கு எந்த ஒரு காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
கிள்ளானில் அணுஉலை கட்டுமானம் எவ்வளவு ஆபத்து விளைவிக்கும் என்பதனைப் பற்றியும் அதன் அபாயகரத்தையும் பொது மக்களுக்கு எடுத்துரைக்க திரட்டப்பட்ட இக்கூட்டத்தை தலைமை தாங்கியதற்காக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட அதேவேளை, ‘பாலாய் போலீஸ் உதாரா’ என அழைக்கப்படும் வட காவல் நிலையத்திற்கு முன்பாக ‘டத்தோ தி’ ஆபாச காணொளி பற்றி மனு தாக்கல் செய்ய கூட்டம் கூட்டியவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஒரே மலேசியாவின் இரட்டை வேடத்தை மிகத் தெளிவாகத் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது என சார்ல்ஸ் சாடினார்.
“ஆனாலும், இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. கிள்ளானிலோ, மலேசியாவின் எந்த ஒரு மூலையிலே அணு உலை கட்டக் கூடாது என்பதையும் அது மக்களுக்கு எத்தகைய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை பொது மக்களுக்குத் தெரிவிப்பதும் எனது தலையாய கடமையாகும். இது சம்பந்தமாக மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் எனது முயற்சியும் பணியும் மேலும் தொடரும்”, என சார்ல்ஸ் சந்தியாகோ திட்டவட்டமாக கூறினார்.