Thursday, March 31, 2011 4:18 pm

மூலம் :- செம்பருத்தி

அண்மையில் இந்தியர்களின் நீண்டகால பிரச்னைகளில் முக்கிய மூன்று பிரச்னைகள் அதாவது குடியுரிமை பிரச்னை, இந்திய வியாபாரிகள் தொழில் முனைவராகும் பிரச்னை, மற்றும் இந்தியர்களுக்கு தரமான வேலை வாய்ப்பு உருவாக்கும் ஆகிய பிரச்னைகளை தற்போது நாட்டுப் பிரதமர் நாஜிப் தீர்த்து வருகின்றார் என மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

அவரின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனாலும், இங்கு எழும் கேள்வியே ஏன் இத்துணைக் வருடம் இந்தியர்களின் பிரச்னையைத் தீர்க்க அரசாங்கம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பதேயாகும் என ஜ.செ.க உறுப்பினரும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.

இந்தியர்கள் காலங்காலமாக தே.மு-க்கு வாக்களித்துக் கொண்டுத்தான் இருந்தனர். 53 ஆண்டுக் காலமாக தே.மு. மலேசியாவை ஆண்டுக் கொண்டுத்தான் இருந்தது. ஆனாலும், இந்தியர்களின் பிரச்னைத் தீர்ந்தபாடில்லை. நாட்கள் பல திரண்டோட இந்திய மக்களின் பிரச்னை மேலோங்கித் தான் நின்றது.

ஆனால், இன்று இத்துணை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மக்களின் பிரச்னையை தீர்பதாக சொல்கின்ற அரசாங்கத்தின் செயல் மக்கள் கூட்டணிக்கு அதிகாரத்திற்கு வந்த பிறகு பயத்தில் செய்வதுப் போல் தெரிகிறது என சாடினார் சார்ல்ஸ்.

மக்களின் நலனைக் காக்கும் அரசாங்கம் யாருக்கும் பயந்து அவர்களது சேவையை செய்யக் கூடாது. மாறாக மக்கள் நலனை காப்பதில் இலக்காக கொண்ட அரசாங்கமாய் திகழ வேண்டும். மக்களின் பிரச்னையை அறிந்து அதை தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாக கருத வேண்டும். அதுமட்டுமல்லாது, இந்தியர்களின் பிரச்னை தீர்ப்பது ஒருவார பிரச்சாரமாக இருத்தல் கூடாது, அது அரசாங்க கொள்கையாகவும் யுக்தியாகவும் இருத்தல் வேண்டும் என சார்லஸ் கேட்டுக் கொண்டார்.

அதிலும், மலேசிய இந்தியர்களின் நலன் காப்பதிலும் அவர்களின் பிரச்னைகளையும் இந்த முயற்சியும் ஒரு பகடைக் காயாக இல்லாமல் இந்தியர்களின் பிரச்னையை உண்மையிலே தீர்க்க வேண்டும் என அரசாங்கத்தை சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.

எப்போது அரசாங்கம் இந்தியர்களின் பிரச்னையைக் கண்டும் காணாமல் இருக்கிறதோ அன்றுதான் பிரச்னையே ஆரம்பமாகிறது என்று அவர் மேலும் கூறினார்.