மூலம் :- மலேசியா இன்று

8 Mar | செய்தி.

“பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற மூதுரைக்கு ஒப்ப ஒவ்வொரு விஷயத்திலும், துறையிலும் பெண்களின் ஈடுபாடு மிக முக்கியம் என தாம் கருதுவதாக டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்  சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
 
“பெண்களின் நலன் கருதி இயங்கிவரும் சேடவ் எனும் பெண்களை எந்தவித பாரபட்சம் அல்லது வித்தியாசப்படுத்திப் பார்க்கும் அனைத்தையும் ஒழிக்கும் மாநாட்டை நான் வரவேற்கிறேன்”, என்றார் சார்ல்ஸ்.
 
1995 இல் மலேசியாவில் அரசியலிலும், முக்கிய முடிவுககளைத் தீர்மானிக்கும் துறையிலும் பெண்களின் ஈடுபாடு 30 விழுக்காடு இருப்பதை உறுதி செய்யத் திட்டமிடப்பட்டது. ஆயினும், 2009 – ம் ஆண்டில் பெண்களின் ஈடுபாடு நாடாளுமன்றத்தில் 10 விழுக்காடுக்குக் குறைவாகவும், அமைச்சரவையில் 6 விழுக்காடுக்குக் குறைவாகவும் உள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
 
அதே வேலையில், வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை  பத்து வருடங்காலமாக 47 % விழுக்காடு மட்டுமே உள்ளது. அதிலும் 2009 ஆம் ஆண்டு அரசியல் துறையிலும் அரசு பிரதிநிதிகளின் துறையிலும் பெண்களின் ஈடுபாடு 14  விழுக்காடாக ஆக இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்றாரவர்.
 
அரசாங்கத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோ குழந்தைகள் பராமரிப்பு சேவைகளை தாய்மார்களுக்கு தயார் படுத்திக் கொடுத்தால் பல பெண்கள் வேலைகளுக்குச் செல்லவும் அவர்களது பங்கையும் சேவையையும் பல துறைகளில் ஆற்றவும் ஏதுவாக இருக்கும் என்று அவர் ஆலோசனை கூறினார்.
 
மேலும், பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில்  அரசாங்கம் உறுதியாகச் செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக சம்பளம் வழங்கும்போது எந்தவொரு பாரபட்சமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மலேசியாவில் ஆண்கள் செய்யும் அதே வேலையைப் பெண்கள் செய்தால் அவர்களது சம்பளத்தை குறைத்துக் கொடுப்பதும்  அதிலும் சிலத் துறையில்  ஆண்களின் சம்பளத்தை விட 20 விழுக்காடு குறைவாகவே வழங்குவது நியாயமில்லாமலும் சரிசமம் இல்லாமலும் நடந்து கொள்வதை தெளிவாகக் காட்டுகிறது.
 
ஆகவே, தகுதி பெற்ற பெண்கள் ஆண்களுக்கு சரிசமமாக, சமமான வேலை செய்யும் பெண்களுக்கு, சம ஊதியத்தை தர வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநிலம் முதல் பெண்ணை நியமிக்க வேண்டும்
 
அதுமட்டுமின்றி, அரசியல் துறையில் பெண்களின் ஈடுபாடு 30 விழுக்காட்டை எட்டிப்பிடிக்கவும், பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் கருத்தாய் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கம், நகராட்சி மன்றத் தலைவராக முதல் பெண்மணியை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
“நாட்டுக்கும் வீட்டுக்கும் ஒரு சக்தியான மற்றும் வலிமையான பெண்கள் தேவை. அதிலும், அரசியலில் அவர்களது ஈடுபாடும் சேவையும் நாட்டின் சீரான முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் மிக முக்கியம் என்பதில் சிறிதளவுக் கூட ஐயமில்லை”, என்பதை சார்ல்ஸ் சந்தியாகு வலியுறுத்தினார்.