மூலம் :- மலேசியா இன்று

23 Mar | செய்தி.

கடந்த சில மாதங்களில், குறிப்பாக செப்டம்பர்/அக்டோபர் 2010லிருந்து 2011 பெப்ரவரி வரை, அன்றாட தேவைகள் மற்றும் இதர அவசியமான பொருள்களின் விலை (குழந்தைகளின் உணவு, பள்ளிச் சீருடை, போக்குவரத்து) பெருமளவில் ஏற்றம் கண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டிலிருந்த பூண்டின் விலை இப்போது 400 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக் காட்டினார்.

ஓய்வூதியம் பெறுவோர்கள் இன்னும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருள்களுக்கு அவர்கள் ஒவ்வொரு மாதமும் 39 விழுக்காட்டைச் செலவழிக்கின்றனர். பொருள்களின் இப்போதைய விலையேற்றம் அவர்களுக்கு பெரும் சுமையாகவுள்ளது.

உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் அனைத்து மக்களையும் பாதிக்கிறது. ஏழை மக்களையும் நடுத்தர வருமானம் பெறுபவர்களையும் அதிகமாகப் பாதிக்கிறது என்றாரவர்.

இச்சிரமங்களை எல்லாம் அறிந்திருந்தும் அரசாங்கம் டீசல், பெட்ரோலிய திரவ வாயு, சீனி போன்ற பொருள்களுக்கான உதவித் தொகையைக் குறைக்கத் தொடங்கியுள்ளது. இதர பொருள்களுக்கான உதவியைத் தொகையைக் குறைப்பதற்கு இது ஒரு முன்னோடியாகும் என்று அவர் மேலும் கூறினார்.

ஆயினும், இந்நடவடிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இந்த உதவித் தொகை குறைப்பால் 2010 ஜூலையிலிருந்து டிசம்பர் வரையில் அரசாங்கத்தின் செலவினம் ரிம750 இலட்சம் குறையும்.

ஆனால், இந்த உதவித் தொகைக் குறைப்பாலும், உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தாலும் நாட்டிலுள்ள ஏழை மற்றும் நடுத்தர வருமானம் பெறும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்பது நிச்சயம் என்றார் சார்ல்ஸ்.

ஏழை மக்களுக்கு உதவித் தொகை வழங்க பணம் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது.

ஆனால், அரசாங்கத்தின் நெருங்கிய நண்பர்களுக்கும் நிருவாகிகளுக்கும் கொடுப்பதற்கு நிறையப் பணம் இருக்கிறது என்று கூறிய சார்ல்ஸ், அரசாங்கம் புன்சா நியாகா நீர் விநியோக நிறுவனத்திற்கு ரிம320 இலட்சத்தை மிகுந்த சலுகை முறையில் கடனாக கொடுத்துள்ளது என்றார்.

அரசாங்கம் மக்களின் நலனில் மெத்தனப் போக்கைக் கடைபிடிக்காமல், பொருள்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதிலும், அரசு உதவித் தொகையை நிறுத்துவதைத் தொடராமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாரவர்.

தற்போது பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவிக்கும் மக்களின் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் உத்தேசிக்க வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகு கேட்டுக்கொண்டார்